நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார் இவர் நேற்று மாலை பயணிகளுடன் கூடலூர் நகரில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பயணிகளை இறக்கி விட்ட சோமசுந்தரம் ஆட்டோவை சுத்தம் செய்துள்ளார். அப்போது யாரோ ஒருவர் செல்போனை ஆட்டோவில் விட்டு சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சோமசுந்தரம் கூடலூர் காவல் நிலையத்திற்கு சென்று சப்-இன்ஸ்பெக்டர் இப்ராஹாம் முன்னிலையில் போலீசாரிடம் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த செல்போனை ஒப்படைத்தார். மேலும் செல்போனை தவற விட்ட கல்லூரி மாணவரான விஷ்ணு சூர்யா என்பவர் புகார் அளிப்பதற்காக கூடலூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி செல்போனை ஒப்படைத்தனர். மேலும் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் பாராட்டியுள்ளனர்.