தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை தனது மகளை கட்டாயப்படுத்தி எச்.புதுப்பட்டியை சேர்ந்த 25 வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிறுமி கர்ப்பமானார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக சிறுமியின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. மேலும் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்திருப்பது குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியின் தந்தை, மாமியார் ஆகியோர் மீது குழந்தை திருமண தடை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.