திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு இரண்டு தனியார் பேருந்துகள் காலையில் 7:45 மணிக்கு இயக்கப்பட்டது. இந்நிலையில் பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது ஒரு தனியார் பேருந்தை வழிமறித்து மற்றொரு தனியார் பேருந்து டிரைவர் தகராறு செய்துள்ளார். இதனால் திண்டுக்கல்-பழனி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து இரண்டு பேருந்துகளின் ஆவணங்களை போலீசார் சோதனை செய்தபோது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இரண்டு பேருந்துகளுக்கும் ஒரே நேரத்தை வழங்கியது தெரியவந்தது. இந்த பிரச்சனை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் பேசி முடிவு எடுத்துக் கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதால் தனியார் பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.