ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து அரசு பேருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திம்பம் மலைப்பாதையின் 21-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றது. இதனால் டிரைவர் எவ்வளவோ பேருந்தை இயக்க முயற்சி செய்தார். ஆனால் மேற்கொண்டு பேருந்தை இயக்க இயலவில்லை.

சுமார் 1 மணி நேரம் பயணிகள் சாலையில் நின்று மிகவும் சிரமப்பட்டனர். இதனையடுத்து அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறி பயணிகள் சத்தியமங்கலம் சென்றனர். இதுகுறித்து பயணிகள் கூறும் போது, மலைப்பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை நல்ல தரத்துடன் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.