நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி நெல் அறுவடைக்கு பின் பயறு, உளுந்து சாகுபடி செய்து பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கீழ்வேளூர் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக  தரிசில் பயிறு சாகுபடி ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் 10,200 ஏக்கர் உளுந்து மற்றும் பச்சைபயிறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த உளுந்து மற்றும் பச்சைபயிறு பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நன்னூட்ட கலவை போன்றவை மானிய விலையில் கீழ்வேளூர், ஆந்தகுடி, வலிவலம், தேவூர், கிள்ளுக்குடி போன்ற ஐந்து வேளாண்மை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு தற்போது வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின் தரிசில் உளுந்து பயிறு வகை பயிர்களை பயிரிடலாம். இதன் மூலமாக மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கும் கூடுதல் லாபம் கிடைக்கிறது ‌.

அதேபோல் பயறு  வகை பயிர்களின் வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் பாக்டீரியா, வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்த உதவுகிறது. மேலும் மண்ணின் அங்கக கரிம சத்துக்கள் அளவு அதிகரிக்கிறது. இதனை பயிர் சாகுபடி செய்வதால் குறைந்த நாட்களில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது. அதனால் நெல் அறுவடை நிறைவு பெறும் நிலையில் விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின் உளுந்து பயிறு சாகுபடி செய்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.