நடிகர் மன்சூர் அலிகான் மனுவை ரூபாய் ஒரு லட்சம் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான்னுக்கு நடிகை திரிஷா,  நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். தேசிய மகளிர் ஆணைய பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, நடிகை திரிஷாவும் அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த சூழ்நிலையில் தான் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி,

நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ,  நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது நடிகை திரிஷா தரப்பில்,

மூன்று பேருக்கு எதிராக ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியாது என்றும், தன்னை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மன்சூர் அலிகான் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கூறினார் என்றும்,  தனது கருத்து எதிர் கருத்துதான் என்றும் வாதிடப்பட்டது. மன்சூர் அலிகான் தரப்பில் மூன்று பேருக்கு எதிராக ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியும் என்றும், தான் பேசிய வீடியோவை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார் நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவரும் எக்ஸ் வலைத்தளத்தில் தனது கருத்துக்களை பதிவு செய்திருப்பதனால் இதை அவதூறாக கருத முடியாது என விளக்கம் அளித்தார். பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு என்றும், இதே விவகாரத்தில் தான் மன்சூர் அலிகான் மன்னிப்பு கூறியுள்ளார்.

உரிமையியல் சட்டப்படி  மூன்று பேருக்கு எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது என நீதிபதி தெரிவித்திருக்கிறார். நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்தில்,  விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி மன்சூர் அலிகானுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார். அந்த அபதார தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறில் இருக்கக்கூடிய புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை விதித்திருக்கிறார்.