ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழப்பு என மாநில அரசு தெரிவித்துள்ளது..

ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அதாவது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமார் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதி அருகிலுள்ள தண்டவாளத்தில் கவிழ்ந்த நிலையில், அதன்மீது யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.. தற்போது தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது..

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 56 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல்   தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒடிசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..

இந்நிலையில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழக்கவில்லை, 275 பேர் உயிரிழந்ததாக ஒடிசா தலைமைச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த 275 பேரில் 88 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த 1175 பேரில் தற்போது வரை 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.