மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்..

கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்திருந்தார். இந்த ஹெலிகாப்டர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருகிறது என்று யுடியூபர் மாரிதாஸ் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக மாரிதாஸ் மீது மதுரை சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. அதன்படி கடந்தாண்டு டிசம்பர் 9ஆம் தேதி மாரிதாஸை கைது செய்தது மதுரை சைபர் கிரைம் போலீஸ்.

இதனைத்தொடர்ந்து தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மறுநாளே மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசரமாக விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்துள்ளார். இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாரிதாஸ் மீதான வழக்கில் புலன் விசாரணை நடத்த போலீசுக்கு ஹைகோர்ட் கிளை உரிய அவகாசம் தரவில்லை. மேலும் 4 நாட்களில் அவசரமாக வழக்கை ரத்து செய்தது அதிருப்தி அளிப்பதாக கூறி ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.. மேலும் மாரிதாஸ் மீதான வழக்கில் காவல்துறை புலன் விசாரணை நடத்த ஏதுவாக உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவால் மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கில் போலீஸ் விசாரணை தொடர்வதற்கான தடை நீங்கியுள்ளது.