ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.சட்டமன்ற கூட்டத்தொடரின் தொடக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் பல்வேறு விஷயங்களை வலியுறுத்தியுள்ளார். அதில், உரையில் பல பகுதிகளை படிக்காமல் உரையில் குறிப்பிடாத புதிய கருத்துக்களை இணைத்து உரையாற்றினார். தமிழக சட்டமன்ற வரலாற்றின் மரபுகளை மீறும் வகையில் ஆளுநர் செயல்பட்டுள்ளார். ஆளுநர் பதவி என்பது மிகவும் உயர்வானது, அதனை நாம் அனைவரும் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம். தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கை ஆளுநர் ரவி கடைபிடித்து வருகிறார். தமிழ் மக்களின் பண்பாடு, இலக்கியம், சமநோக்கான அரசியல் மீது எதிர் மனப்பாங்கினை வெளிப்படுத்தி வருகிறார்

அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான சார்பு நிலையை ஆளுநர் பொதுவெளியில் எடுத்துக் கொண்டுள்ளார். பல்லாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை மீறாமல் தமிழ்நாடு அதன் மக்களுக்கேற்ற வகையில் பணியாற்ற அறிவுறுத்த வேண்டும். மாநில அரசு சிறந்ததொரு நிர்வாகத்தை வழங்க வழிவகை செய்யவும், மக்களாட்சி தத்துவம் செம்மையடையவும் ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

தனது கருத்துக்களை பொதுவெளியில் பேசி மாநிலத்தில் அமைதியின்மை ஏற்படக்கூடிய சூழலை ஆளுநர் ஏற்படுத்தி வருகிறார். முக்கியமான மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். ஜனாதிபதியின் முயற்சி இந்த விவகாரத்தில் நல்ல பலனை தரும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.