பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெயர்களை அரசாணையில் வெளியிட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை  பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட  ஒரு பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில் 9 பேர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டதாகவும், அந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால் மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமைச் செயலாளரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகார் மனு ஜூலை 22ஆம் தேதி டிஜிபி மற்றும் கோவை எஸ்பிக்கு  பரிந்துரைக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கடந்த ஆண்டு ஜனவரியில் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.. இந்த மனுவானது சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில்  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்கள் பெயர்களை அரசாணையில் வெளியிட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் பாலச்சந்தர் என்பவர் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து ரூபாய் 50,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.