பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமக்கு வழங்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் பல்வேறு தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சிங்காநல்லூர், மதுரை தெற்கு உள்ளிட்ட 6 முக்கியப் பகுதிகளுக்குத் தேர்தல் பரப்புரை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார்.

தேர்தல் களத்தில் தீவிரமாகச் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப் பொறுப்புகளிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார். தனது விலகல் குறித்து அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணமாவது, “எனது தந்தையின் உடல்நிலை தற்போது சீராக இல்லை. அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால், என்னால் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் பரப்புரை பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், பாஜகவின் முக்கிய முகமான அண்ணாமலையின் இந்த திடீர் விலகல் அக்கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதே நேரத்தில் தமிழக தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார் என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கதாகும்.