மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தின் யஷ்வாடி கிராமத்தில் உள்ள ஹனுமன் கோயிலில் நேர்ந்த பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கோயிலின் கருவறைக்கு முன்பாக தற்பொழுது புதிதாக அமைக்கப்பட்டு வந்த சபா மண்டபத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போர்முனையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இடிபாடுகளை அகற்ற கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பல ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்களும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்து கொண்டிருக்கும் போதே, எதிர்பாராத விதமாக திடீரென மண்டபத்தின் கூரை சரிந்து விழுந்து அவர்கள் இடிபாடுகளுக்குள் புதையுண்டு போகும் காட்சிகள் அதில் பதிவாகி பார்ப்போரைக் கலங்கடித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.