
தூத்துக்குடி மாவட்டம் ஆசிரியர் காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவருக்கு சொந்த ஊர் கயத்தார் தெற்கு மயிலோடை கிராமம் ஆகும். இவர் கடந்த 19ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு தூத்துக்குடி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது தூத்துக்குடி புதிய துறைமுகம் – மதுரை பைபாஸ் சாலையில் டிப்பர் லாரி ஒன்று சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. அதே சாலையில் சென்ற வேலுச்சாமியின் இரு சக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் டிப்பர் லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த வேலுசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகிலிருந்தவர்கள்ஆம்புலன்ஸை வரவழைத்தனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சாலையோரத்தில் லாரியை நிறுத்திய ஓட்டுனரை தேடி வருகின்றனர். அவர் ராமநாதபுரம் சேர்ந்த தர்மர் (25) என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.