தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் வருகின்ற 7 மற்றும் 8 தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சை, நாவை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்க கடலில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, கேரளா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகளில் சூறாவளிக்கு வாய்ப்புள்ளது. இங்கு மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.