நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் ஆடிட்டரான ராம்ஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான சண்முகவேலுவுக்கு இதய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவதற்காக ராம்ஜி, சண்முகவேல் அவரது மகன் கிரிவரதன் ஆகியோர் சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளனர். அந்த காரை கணபதி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கருத்த ராஜா பாளையத்தில் இருக்கும் அரவை ஆலை பகுதியில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராம்ஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.