கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்தியானந்தா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது சீடர்கள் சிலருடன் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் கைலாசா என்னும் தீவை விலைக்கு வாங்கி அங்கு அவர் குடியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்தியானந்தா அவபோது சமூக ஊடகங்களில் பேசி வருகிறார். அதே சமயம் பிடதி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களை நித்தியானந்தாவின் சீடர்கள் நிர்வாகித்து வருகின்றனர். அந்த வகையில் நித்தியானந்தாவிற்கு சென்னை அருகே திரிசூலம் மலைமகள் நகரில் ஆசிரமம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த ஆசிரமத்தை அவரது சீடர்கள் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு  சில மர்ம நபர்கள் இந்த ஆசிரமத்தில் தொடர்ச்சியாக கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரம நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்கு முன்பாக அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால்  அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.