தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெய்த சாரல் மழையின் காரணமாக நீர்வரத்து பெருகி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே நேற்று முன்தினம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடைவிதித்து வனத்துறையினர் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று காலையில் அருவியில் நீர்வரத்து குறைந்து சீரானது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவியின் நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.