எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் கடனை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் மீறி, ”வீரமே வாகை சூடம்” என்ற படத்தை வெளியிட்தற்காக  விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து  விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியினுடைய உத்தரவை உறுதி செய்து, உத்தரவிட்டது. மேலும் அந்த தொகையை செலுத்தா விட்டால் தனி நீதிபதியின் முன் உள்ள வழக்கின் தீர்ப்பு வரும்வரை  விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் மற்றும் OTT தளத்தில் வெளியிடக் கூடாது எனவும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி பி.டி ஆஷா முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கின் விசாரணைக்காக நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில்,  இன்றைய தினம் நீதிபதி பி.டி ஆஷா முன்பு  வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவுபடி நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.  அப்போது இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி பல்வேறு கேள்விகளை விஷால் தரப்பிற்கு எழுப்பி இருக்கிறார்.

குறிப்பாக 15 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு 8ஆவது மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்றைய தினமே 1 கோடி ரூபாய் கணக்கில் இருந்தும் நீங்கள் பணத்தை செலுத்தவில்லை. இதற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது ? நீதிமன்றத்தை அவ்வளவு சாதாரணமாக நீங்கள் நினைக்கிறீர்களா ? என நீதிபதி கேள்வியை எழுப்பினார். மேலும் இந்த பணத்தை திரும்ப செலுத்துவதற்காக விஷால் என்ன திட்டம் வைத்திருக்கின்றார் ? 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய முடியாதா ? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பணத்தை செலுத்தவில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களையும் எதிர்காலத்தில் தடை விதிக்கலாமா ? என்ற ஒரு கேள்வியை  நீதிபதி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நடிகர் விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன்,  தனது தரப்பும், லைகா தப்பும் தொடர்பான இந்த விவகாரத்தில் எவ்வளவு நிலுவை தொகை உள்ளது ? என்பது தொடர்பாக ஒரு ஆடிட்டர் வைத்து எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் ?  என்பது தொடர்பாக ஒரு மூன்றாவது நபரை வைத்து மத்தியஸ்தம் போன்று செய்யலாம் என்ற ஆலோசனை  விஷால் தரப்பில் வைக்கப்பட்டது.

நீதிபதியைப் பொறுத்தவரை உங்களது சொத்து விவரங்களை பிராமண பத்திரமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.அதை தாக்கல் செய்து விட்டீர்களா ? என்ற ஒரு கேள்வியையும் நீதிபதி கேட்டிருந்தார். இதனை தொடர்ந்து விஷால் தரப்பை  பொறுத்தவரைக்கும் சக்கரா படத்தை OTT மற்றும் சேட்டிலைட் மூலம் வெளியிட லைக்கா நிறுவனம் தடை உத்தரவு வாங்கி உள்ளது. அதனை நீக்கி படத்தை OTT  மற்றும் சேட்டிலைட்டில்  வெளியிட்டால், இந்த பணத்தை லைக்கா நிறுவனத்திற்கு திரும்ப அளித்து விடுவதாக தெரிவித்தார்.

மேலும் கோபுரம் நிறுவனத்திடம் தான் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதாக லைக்கா கூறியது. அந்த பணத்தை திரும்ப அளிப்பதாக நான் கூறினேன். அது தான் இருவடுக்குமிடையே ஒப்பந்தம்.ஆனால் அந்த ஒப்பந்தம் கடன் ஒப்பந்தமாக மாறி உள்ளதாகவும் நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி நீங்கள் என்ன படிக்காத நபரா ? ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பொழுது அதனை படிக்கவில்லையா ? கையெழுத்திடுமாறு யாரேனும் துப்பாக்கியை வைத்து மிரட்டினாரா ? என்ற கருத்தையும் நீதிபதி எழுப்பியிருந்தார்.