
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் தனது கட்சியாளருடன் ஈடுபட்டார். அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததால் வேட்பாளர் சீதா லட்சுமி உட்பட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கருங்கல்பாளையம் ஜீவாநகரில் வேட்பாளர் சீதாலட்சுமி தனது கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அவர்கள் உரிய அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் பறக்கும் படை அதிகாரியான நவீன் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் சீதாலட்சுமி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று நேற்று ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வேட்பாளர் சீதாலட்சுமி பிரச்சாரம் செய்தார். அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததால் அவர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.