நடிகர் அழகப்பன் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக அனுஷா பிரதாப் நடிக்கிறார். இந்த சீரியலின்  படப்பிடிப்பு நேற்று முன்தினம் பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் நடைபெற்றுள்ளது. அப்போது அழகப்பன் தனது விலை உயர்ந்த செல்போனை அங்கிருந்த மேஜையின்  மீது வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தபோது செல்போன் திருடுபோய் இருந்தது.

இதனையடுத்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர்.  அதில் ஜவுளி வாங்க வந்தவர் போல் 2 இளம்பெண்கள் வந்து, நடிகர் அழகப்பனின் செல்போனை திருடி செல்வது பதிவாகியுள்ளது. எனவே அவர் இது குறித்து திரு.வி.க. நகர் போலீசில் புகார்மனு கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து  கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து போலீசார் நடிகரின் செல்போனை திருடிய பெண்களை பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.