பெங்களூரு நகரில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடன் பயணித்த சினேகா என்ற பயணி, தனது நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்துள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் ஆட்டோ முன்பதிவு செய்த சினேகா, பெண் ஓட்டுநர் ஒருவரின் வாகனத்தில் பயணித்தபோது அவரிடம் உரையாடியுள்ளார்.

அப்போது அந்தப் பெண் ஓட்டுநர், தாம் மாதந்தோறும் சுமார் 45,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகவும், கோரமங்களா பகுதியில் மட்டும் தங்களைப் போன்ற 300 பெண் ஓட்டுநர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

 

வழக்கமான பணிகளிலிருந்து விலகி, ஆண்கள் அதிகம் ஈடுபடும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் பெண்கள் தடம் பதித்து வருவதும், பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைந்து வருவதும் பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் இது போன்ற முயற்சிகள் அவசியம் என நெட்டிசன்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.