தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நக்மா. தற்போது 46 வயது ஆகும் நக்மா இது வரை திருமணம் செய்து கொள்ளாததோடு சினிமாவை விட்டு விலகியும் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கும் நக்மா ஆன்லைன் மோசடியால் ஏமாந்துள்ளதாக தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது நக்மாவின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அந்த லிங்கை நடிகை நக்மா கிளிக் செய்தவுடன் வங்கி அதிகாரி ஒருவர் நக்மாவுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அந்த நபர் உங்கள் வங்கி கணக்கின் கேஒய்சி விவரம் புதுப்பிக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார். அவர் பேசிய சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நக்மா உடனே மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்பையில் சமீப காலமாகவே 80 பேர் கேஒய்சி அப்டேட் என்ற மோசடியால் பணத்தை இழந்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.