தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் என்ற  மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் என்ற மாகாணத்திற்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.  இந்த வேன் கியாஸ் மூலம் இயங்கியது. இந்நிலையில் வேன் தலைநகர் பாங்காங் அருகே ஷி கியூ என்ற மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி,  சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியது.

இதனையடுத்து மோதிய வேகத்தில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. ஆனால் தீ பரவுவதற்கு முன், அந்த வேனில் இருந்த 20 வயது இளைஞர் ஒருவர் மட்டும் வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவத்தில் மற்ற 11 பேரும் வேனுக்குள் சிக்கி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.