ராஜஸ்தான் மாநிலத்தில்  உதய்ப்பூர் பகுதி ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கிறது. இப்பகுதிக்கு பிரெஞ்சு பெண் ஒருவர் விளம்பர படப்பிடிப்பிற்காக தனது தோழிகளுடன் வந்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் இந்தியாவிற்கு வந்த இவர் ஒரு வருட விசாவில் தங்கியுள்ளார். அவரது விளம்பர படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளை ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் செய்து கொடுத்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பிரெஞ்சு பெண் அவரது தோழிகள் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஊழியர்களுடன் வெளியே செல்ல முடிவு செய்தனர். அதன்படி உதய்ப்பூரின் புட்கான் பகுதியில் உள்ள டைகர் கில்ஸ்க்கு சென்றனர். அங்குள்ள ஒரு உணவகத்தில் அனைவரும் உணவு சாப்பிட்ட நிலையில் மது அருந்தியதால் போதையில் தள்ளாடினர்.

அந்த சமயத்தில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஊழியரான சித்தார்த் என்ற நபர் பிரெஞ்சு பெண்ணிடம் சென்று இந்த நகரத்தை சுற்றி காட்டுகிறேன் என்று கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் வெளியே செல்லாமல் ஒரு உணவகத்தின் அறைக்கு அழைத்துச் சென்று அங்கு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சித்தார்த் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் சென்ற உணவகத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளில மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைவில் கைது செய்வோம் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பிரெஞ்சு தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை தேடுவதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.