மகாராஷ்டிராவில் செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற திருடனை ஒரு இளம்பெண் துணிச்சலாகத் துரத்திப் பிடிக்க முயன்றபோது நடந்த விபத்தின் ‘பகீர்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையில் தனியாகச் சென்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென செயினைப் பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சற்றும் யோசிக்காமல் தனது ஸ்கூட்டியிலேயே அந்தத் திருடனைத் துரத்தியுள்ளார்.

திருடனின் பைக்கைத் தனது ஸ்கூட்டியால் முட்டித் தள்ள முயன்றபோது, எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அந்தப் பெண் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். திருடனும் நிலைதடுமாறி கீழே விழுந்தான். இளம்பெண் சத்தமிட்டதைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டதோடு, தப்பியோட முயன்ற திருடனை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் திருடனைப் பிடிக்க முயன்ற அந்தப் பெண்ணின் துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டி வரும் வேளையில், இந்த விபத்து காட்சி பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.