யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வந்தாலே நிஜமான வெற்றியாளர்களை விட, இந்த மாதிரி ‘போலி’ வெற்றியாளர்களின் அலப்பறை தான் இப்போது அதிகமாகிவிட்டது. பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் யாதவ் என்பவர், தான் யுபிஎஸ்சி தேர்வில் 440-வது ரேங்க் எடுத்து ஐஏஎஸ் ஆகிவிட்டதாக ஊர் முழுவதும் தண்டோரா போட்டுள்ளார். இதை நம்பிய ஊர் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கித் திருவிழாவே கொண்டாடியுள்ளனர். ஒரு படி மேலே போய், அந்த ஊர் எம்எல்ஏ-வே இவரை நேரில் சந்தித்துப் பாராட்டி பரிசுகளையும் வழங்கியுள்ளார். போலீஸ் நிலையத்திலும் இவருக்குச் சிறப்பு மரியாதை கொடுத்து இனிப்பு ஊட்டிவிட்டுள்ளனர்.

​அந்தச் சமயத்தில் ரஞ்சித் கொடுத்த மோட்டிவேஷன் ஸ்பீச் தான் இப்போது சோசியல் மீடியாவில் ‘மீம்ஸ்’ மெட்டீரியலாக மாறியுள்ளது. “ஒரு நாளைக்கு 4 மணி நேரம் படிச்சாலே போதும், வாழ்க்கையில முன்னேறலாம்” என்று அவர் கொடுத்த பில்டப்பை பார்த்துப் பலரும் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர். உண்மை என்னவென்றால், அந்த ரேங்க் கர்நாடகாவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவருடையது. சந்தேகம் வந்த போலீஸ், “தம்பி.. கொஞ்சம் உன் ஆதார் கார்டையும், அட்மிட் கார்டையும் எடுத்துட்டு ஸ்டேஷனுக்கு வா” என்று கூப்பிட்டதுமே, ரஞ்சித் மொபைலை சுவிட்ச்-ஆஃப் செய்துவிட்டு ஊரை விட்டே ஓடிவிட்டார். ஏற்கனவே பீகாரில் ஆகாஷா சிங் என்ற பெண் இதுபோல் சிக்கிய நிலையில், இப்போது இந்த ‘420 ஐஏஎஸ்’ மேட்டர் இந்தியா முழுவதும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.