மும்பை அருகேயுள்ள வசையில் மீன் வியாபாரி ஒருவர் செய்துள்ள காரியம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வசையின் நவஜீவன் பகுதியில் கடை வைத்துள்ள அந்த வியாபாரி, விற்பனைக்காக வைத்திருந்த மீன்கள் மீது கரப்பான் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ‘லால் ஹிட்’ (Lal Hit) விஷ ஸ்ப்ரேயை அடித்துள்ளார். மீன்களில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்ப்பதைத் தவிர்க்க அவர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதைப்பார்த்த விழிப்புணர்வுள்ள குடிமகன் ஒருவர், அந்த வியாபாரியின் செயலைத் தனது செல்போனில் ரகசியமாகப் படம் பிடித்துச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மிகவும் நச்சுத்தன்மை கொண்ட இந்த ஸ்ப்ரேயை உணவுப் பொருட்கள் மீது அடிப்பது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்.

ஏற்கனவே இதே பகுதியில் பழங்களைச் சுத்தம் செய்யச் சாக்கடை நீரைப் பயன்படுத்திய பழ வியாபாரியின் வீடியோ வைரலான நிலையில், தற்போது இந்த மீன் வியாபாரியின் செயலும் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட வியாபாரி மீது உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.