ராஜஸ்தானின் கோட்டா நகரம் நயாபுராவில் உள்ள MBS மற்றும் JK லோன் மருத்துவமனைகளின் மருத்துவர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம், மாணவர்கள் மற்றும் மருத்துவர்களை அலறவைத்தது. விடுதியிலுள்ள ஒரு அறையின் கழிப்பறையில் விஷ நாகப்பாம்பு ஒன்று உள்ளே நுழைந்ததை மருத்துவ மாணவர்கள் பார்த்ததும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுநீர் கழிக்க சென்ற ஒரு மருத்துவர், பாம்பு கண்டு திகைத்து வெளியே ஓடியுள்ளார்.

 

பின்னர், அந்த பாம்பு தன்னிச்சையாக அறைக்குள் நுழைந்து ஒரு மூலையில் அமர்ந்துள்ளது. மருத்துவர்கள் பலரும் சேர்ந்து விரட்ட முயன்ற போதும் அது நகர மறுத்ததால், பாம்பு பிடிப்பவர் கோவிந்த் சர்மா என்பவர் அழைக்கப்பட்டார். சுமார் அரை மணி நேர நீண்ட முயற்சிக்குப் பிறகு, அவர் அந்த நாகத்தை பாதுகாப்பாக பிடித்து, லாட்புரா பகுதியில் உள்ள காட்டில் விட்டுவிட்டார். சம்பவம் குறித்து வனத்துறையிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பு சம்பவம் நிமிடங்களிலேயே வீடியோவாக படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மருத்துவமனை வளாகத்துக்கு சுற்றிலும் அடர்ந்த மரங்கள் மற்றும் புதர்கள் இருப்பதால், விலங்குகள் அடிக்கடி விடுதிக்குள் நுழையும் பிரச்சனை உள்ளது என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மாணவர்கள் சற்றே நிம்மதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.