சேலத்தில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் அதிவேகமாக வந்த ஆட்டோ, சாலையில் நடந்து சென்ற பெண்மணி மீது மோதி இரண்டு முறை அந்தரத்தில் பல்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய வளைவுப் பாதையில் வேகத்தைக் குறைக்காமல் வந்த ஆட்டோ டிரைவரின் கவனக்குறைவால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஆட்டோ மோதிய வேகத்தில் அந்தப் பெண் தூக்கி வீசப்பட்டதோடு, ஆட்டோவும் நிலைதடுமாறி சாலையில் உருண்டது. இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர வைத்துள்ளது.

நேற்று அதிகாலை 5:30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்தவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், காயமடைந்த பெண்மணிக்கு முதலுதவி செய்து தண்ணீர் கொடுத்து உதவினர்.

குடியிருப்புப் பகுதிகளில் வேகத்தடைகள் இருந்தும், அதைக் கண்டு கொள்ளாமல் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவதே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதிவேகமாக ஆட்டோ ஓட்டிய டிரைவர் மீது போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.