அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மதுரை விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றபோது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமுமுக நிர்வாகி ராஜேஸ்வரன் எடப்பாடி பழனிச்சாமியை தர குறைவாக பேசி உள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜேஸ்வரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேப்போன்று அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், இபிஎஸ் பாதுகாவலர் கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிரிஷ்மூர்த்தியின் மகன் அரவிந்தன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி, தாக்குதல், செல்போன் பறிப்பு, காயம் ஏற்படும் வகையில் கொடூரமான முறையில் தாக்குதல் என 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் மீது வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது. அநாகரிகமான சம்பவத்திற்கு காரணமானவரை கைது செய்யாமல் இபிஎஸ் மீது வழக்குப்பதிவது நியாயம் இல்லை. இது அதிமுகவின் வளர்ச்சியை குலைப்பதற்கான அரசின் முயற்சி. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவின் பல்வேறு சூழ்ச்சிகளை தாண்டி அதிமுகவின் வளர்ச்சியையும் வாக்கு வங்கியையும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் காழ்ப் புணர்ச்சி அடைந்த ஆளும் கட்சி இபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.