சென்னை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் ஆதி நகரில் வீட்டு தரகரான தங்கராஜ்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்லாவரம், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக இருக்கும் வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொண்டு தன்னிடம் வாடகைக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என கூறியுள்ளார். மேலும் நீங்கள் கூறும் மாத வாடகையில் 1000 ரூபாயை கூடுதலாக கூறி அதனை தனக்கு தர வேண்டும் என தங்கராஜ் வீட்டு உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் வாடகை மற்றும் குத்தகைக்கு வீடுகள் கிடைக்கும் என விளம்பரம் வந்ததை பார்த்து பலர் தங்கராஜை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

அப்படி வருபவர்களிடம் தங்கராஜ் ஒரு ஆண்டுக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வீடுகளை விட்டுள்ளார். அதே நேரம் வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக மாதந்தோறும் தானே வாடகை கொடுப்பது போல பணம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டு உரிமையாளர்களுக்கு பணத்தை கொடுக்காமலும், குத்தகை முடிந்தவர்களுக்கு பணத்தை கொடுக்காமலும் சுமார் 50 லட்ச ரூபாய் வரை தங்கராஜ் மோசடி செய்து விட்டார். இது தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நேற்று தங்கராஜை அதிரடியாக கைது செய்தனர்.