உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுய விபரம் சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி பராமரிப்பு உதவித்தொகை 2,000 ரூபாய் என்ற அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள்  75 சதவீகிதத்திற்கு மேல் கடும் உடல் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர், முதுகு தண்டுவடம், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, தசைச்சிதைவு போன்ற நோய்கள் மற்றும் தொழு நோயால் பாதிப்படைந்தோர் என 211391 நபர்கள் இத்திட்டத்தின் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தின் கீழ், பயனடைய விண்ணப்பித்து காத்திருக்கும் பட்டியலில் 24951 நபர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இப்போது மாவட்ட உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆகவே இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் பயன்பெறும் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், உடல் குறைபாட்டின் தன்மை, அதன் சதவிகிதம், தேசிய அடையாள அட்டை எண், உதவித் தொகை வந்துசேர வேண்டிய வங்கி கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்களை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதோடு 25676303 என்ற தொலைபேசி எண் மற்றும் [email protected] எனும் மின் அஞ்சல் முகவரி வாயிலாக மேற்குறிப்பிட்ட விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.