கடந்த வருடம் நவ,.26 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இருந்து தில்லி வந்த ஏா் இந்தியா விமானத்தில், 70 வயதான மூதாட்டி மீது சக ஆண் பயணி மது போதையில் சிறுநீா் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆண் பயணியை கைது செய்தனர். இந்த நிலையில் டிஜிசிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ஏா் இந்தியா விமானத்தில் மூதாட்டி இழிவுபடுத்தப்பட்ட சம்பவம் ஜன.4ம் தேதி தான் எங்களுக்கு தெரியவந்தது.

அதன்பின் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம், விமானத்திலிருந்த விமானி மற்றும் பணியாளா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி அவா்கள் அளித்த பதில் ஆராய்ப்பட்ட நிலையில், சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டது. அதனை தொடா்ந்து டிஜிசிஏவின் விமான போக்குவரத்து நிபந்தனைகளை பூா்த்தி செய்யாததால், ஏா் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய்.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூதாட்டி இழிவுபடுத்தப்பட்டபோது விமானத்தில் இருந்த விமானி கடமை தவறியதால், அவரின் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் கடமை தவறிய ஏா் இந்தியா சேவைகள் பிரிவு இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விமானத்தில் பயணியின் ஒழுங்கீனமான செயலுக்காக விமான நிறுவனத்துக்கு டிஜிசிஏ அபராதம் விதிப்பது இதுவே முதல் முறை ஆகும்.