மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் தனது தாய்மொழியான மராத்தியைக் கற்றுத் தருவதற்காக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கையாண்டுள்ள வித்தியாசமான உத்தி, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துப் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

மேலும் வழக்கமாக ஆட்டோக்களில் போஸ்டர்கள் அல்லது விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தின் இருக்கைக்குப் பின்னால், அன்றாடம் பயன்படுத்தும் எளிய மராத்தி சொற்களையும், அதற்கு இணையான ஹிந்தி மற்றும் ஆங்கில வார்த்தைகளையும் கொண்ட ஒரு சிறிய கற்பித்தல் பலகையை அமைத்துள்ளார்.

இந்நிலையில் தன் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் சும்மா அமர்ந்து செல்வதற்குப் பதிலாக, இந்த வார்த்தைகளைப் பார்த்து எளிய முறையில் மராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இவரது முதன்மை நோக்கமாகும்.

மேலும் “என்னிடம் பேசும்போது மராத்தியில் பேசுங்கள்” என்ற வேண்டுகோளோடு அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பைப் பார்த்த பயணிகள் பலரும், அவரது தாய்மொழிப் பற்றையும் அதை மற்றவர்களுக்குக் கற்றுத் தரும் சுவாரஸ்யமான அணுகுமுறையையும் கண்டு வியப்படைந்துள்ளனர். பயணத்தின் போதே இயல்பாக ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநரின் இந்த சுவாரஸ்யமான யோசனைக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திணிப்போ அல்லது வலுக்கட்டாயமோ இல்லாமல், மிகவும் அன்பான முறையில் தனது மொழியைப் பிறருக்குக் கற்பிக்கும் இவரை “உண்மையான மொழி தூதர்” என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவர் வன்முறையோ அல்லது மொழி வெறுப்போ இல்லாமல், நாகரிகமான முறையில் தாய்மொழியை உயர்த்திக் காட்டிய இந்த ஆட்டோ ஓட்டுநரின் செயல் இணைய உலகிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக மாறியுள்ளது.

“>