உத்தரப் பிரதேச மாநிலத்தில், நள்ளிரவில் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஜக்ராஜ் (35) என்ற மாற்றுத்திறனாளியைச் சிறுத்தை ஒன்று கழுத்தில் கவ்வி காட்டுக்குள் இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜக்ராஜ், பாதுகாப்பான கதவு கூட இல்லாத மண் குடிசையில் வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு குடிசைக்குள் நுழைந்த ஆட்கொல்லி சிறுத்தை, உறங்கிக் கொண்டிருந்த ஜக்ராஜின் கழுத்தைப் பிடித்துச் சத்தம் போட முடியாதவாறு அடர்ந்த காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. சனிக்கிழமை அதிகாலை இரத்த வெள்ளத்தில் அவரது சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் கடந்த 25 நாட்களில் சிறுத்தை தாக்குதலுக்கு நடக்கும் 4-வது மரணம் இதுவாகும். மூன்று நாட்களுக்கு முன்புதான் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து உயிர்ப்பலிகள் அதிகரித்து வருவதால், அப்பகுதி கிராம மக்கள் கடும் பீதியிலும் வனத்துறை மீது கடும் கோபத்திலும் உள்ளனர்.

சிறுத்தையைப் பிடிக்க வெறும் கூண்டுகளை மட்டும் அமைத்துவிட்டு வனத்துறை அலட்சியமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டும் பொதுமக்கள், உடனடியாக அந்த ஆட்கொல்லி சிறுத்த மயக்க ஊசி போட்டுப் பிடிக்காவிட்டால் தீவிர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில், அப்பகுதியில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சிறுத்தையைப் பிடிக்கச் சிறப்புப் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், விரைவில் சிறுத்தை அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.