மனிதர்களின் வேகத்துக்கு ரோபோக்களும் போட்டியாக வரத் தொடங்கிவிட்டதை வெளிப்படுத்தும் வகையில், சீனாவில் நடைபெற்ற மனித உருவ ரோபோக்களுக்கான விளையாட்டுப் போட்டியில் ‘தியாங்ஙாங் அல்ட்ரா’ புதிய சாதனை படைத்துள்ளது. 100 மீட்டர் ஓட்டத்தை வெறும் 8.86 வினாடிகளில் கடந்த அந்த ரோபோ, இதற்கு முன்பு இருந்த 9.39 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்தது.
பெய்ஜிங்கில் நடைபெற்ற இரண்டாவது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டியின் 100 மீட்டர் அரையிறுதியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. மனிதர்களுக்கான 100 மீட்டர் உலக சாதனையான உசைன் போல்ட்டின் 9.58 வினாடிகளையும் விட இந்த நேரம் குறைவாக இருந்தது. இதன் மூலம் மனித உருவ ரோபோக்களின் இயக்கம், சமநிலை மற்றும் வேகக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கவனம் பெற்றுள்ளது.
ஆனால் ஓட்டத்தை முடித்தவுடன் ரோபோவால் தனது வேகத்தை சரியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அது தடுப்புப் பகுதியில் மோதி கீழே விழுந்ததுடன், மோதலின்போது சிறிய அளவில் தீப்பொறிகளும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள், ரோபோக்கள் வேகத்தில் முன்னேறினாலும், திடீர் சூழ்நிலைகளைக் கையாளுதல் மற்றும் பாதுகாப்பான இயக்கம் போன்றவற்றில் இன்னும் சவால்கள் இருப்பதை காட்டுகின்றன.
சுவாரசியமாக, போட்டி தொடர்ந்தபோது தியாங்ஙாங் அல்ட்ரா 8.64 வினாடிகளில் 100 மீட்டரை கடந்து தனது 8.86 வினாடி சாதனையையும் மீண்டும் முறியடித்தது. இதனால் சில நாட்களுக்குள் அந்த ரோபோ தனது சாதனையை இரண்டு முறை மேம்படுத்தியுள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்ற இந்தப் போட்டி, எதிர்காலத்தில் மனித உருவ ரோபோக்கள் விளையாட்டு மட்டுமின்றி தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பணிகளிலும் எந்த அளவுக்கு முன்னேறக்கூடும் என்பதற்கான ஒரு சுவாரசியமான முன்னோட்டமாக அமைந்துள்ளது.
