செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்போரூர் ஒன்றிய இணைச் செயலாளராகவும் இருந்தவர் வீராசாமி. சாலை ஒப்பந்ததாரரிடம் இவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தியதாகக் கூறி வீராசாமியைத் தவெக தலைமை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியதுடன், அவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், லஞ்சப் புகாரில் கணவன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுச் சிறைக்குச் சென்றுவந்த சில வாரங்களிலேயே, அதே பதவியில் அவரது மனைவி ஹேமாவதிக்குத் தவெக தலைமை பொறுப்பு வழங்கியுள்ள நிகழ்வு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

லஞ்சப் புகாரில் சிக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு மீண்டும் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்குப் பதவிகள் வழங்குவது கட்சியின் நற்பெயருக்கு எந்த வகையான சமிக்ஞையைக் கொடுக்கும் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

“>

 

நேர்மையான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் தவெகவின் உட்கட்சி நடவடிக்கைகள் குறித்துப் பொதுவெளியில் விமர்சனங்கள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.