மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள பாருய்பூர் பகுதியில், மாலையில் தோழியைப் பார்க்கச் சென்ற 12 வயது சிறுமி ஒருவர்  மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை அங்குள்ள ஒரு குளத்தில், அந்தச் சிறுமியின் உடல் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு, ஒரு சாக்கு மூட்டைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க நபர்கள் சிலர் அந்தச் சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்திருப்பதாக அவளது குடும்பத்தினரும், உள்ளூர் மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனினும், மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்று பாருய்பூர் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குற்றவாளியின் கூட்டாளி என சந்தேகித்து 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை நடுரோட்டில் வைத்து அடித்துக் கொன்றதால் அப்பகுதியில் பெரும் வன்முறை வெடித்தது.

சிறுமியின் உடலை சாலையில் வைத்து, டயர்களை கொளுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒட்டுமொத்தப் போக்குவரத்தையும் முடக்கினர். அதுமட்டுமின்றி, அந்த வழியாகச் செல்லும் ரயில் பாதையையும் ஒரு மணி நேரம் மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நடத்திய இந்த கல்வீச்சு சம்பவத்தில் பல போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. அதில் பலத்த காயமடைந்த ஒரு போலீஸ் அதிகாரி தீவிர சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரி கங்கர் பிரசாத் பருய், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும், தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறி மக்களை அமைதிப்படுத்தினார். இச்சம்பவம் குறித்து அவர் முதலமைச்சர் சுவேந்து அதிகாரியிடமும் பேசியதாகத் தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் நிறுத்தப்பட்டு, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைச் சந்திக்கச் செல்ல முயன்ற முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியை பா.ஜ.க அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.