மகாராஷ்டிர மாநிலம் புனேயில்  சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது ராட்சத மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விபத்தின் கோரமான காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில்  பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்து வருகிறது. சம்பவத்தன்று அந்த முதியவர் தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த பிரம்மாண்ட மரம் ஒன்று வேரோடு சரிந்து அவர் மீது அசுர வேகத்தில் விழுந்தது. இதில் நிலைகுலைந்து போன அவர், மரத்தின் இடுக்கில் சிக்கி பலத்த காயமடைந்தார்.

 

மரம் விழுந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் மற்றும் பாதசாரிகள் உடனடியாக ஓடிவந்து, மரத்தின் கிளைகளுக்கு இடையே சிக்கியிருந்த முதியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அவர், பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்தனர். பராமரிப்பற்ற மரங்களால் பொதுமக்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டும் இந்த வீடியோ, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.