புனே கேதன் அகர்வால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனே ஊரக காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்துத் தனது நடுவிரலைக் காட்டி அநாகரீகமாகச் சைகை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேயின் மார்க்கெட் யார்டு பகுதியில் உள்ள சியா கோயலின் இல்லத்திற்கு காவல்துறையினர் அவரை சோதனைக்காகவும், குற்றத்தின் போது அவர் அணிந்திருந்த ஆடைகளை மீட்பதற்காகவும் அழைத்து வந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. முகத்தை ஸ்கார்ஃப் மூலம் மூடியிருந்த சியா, அங்கிருந்த கேமராக்களைப் பார்த்து இந்தச் செயலைச் செய்துள்ளார்.

“>

இத்தகைய கொடூரமான குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் ஒருவரின் இந்த அலட்சியமான நடத்தை பொதுமக்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. கடந்த ஜூன் 18 அன்று புனே லோஹாகாட் கோட்டையிலிருந்து தனது வருங்கால கணவரான 25 வயது தொழிலதிபர் கேதன் அகர்வாலை, சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் சௌத்ரி ஆகிய இருவரும் சேர்ந்து திட்டமிட்டுப் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆரம்பத்தில் கேதன் தவறி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறி சியா நாடகமாடிய நிலையில், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் இந்தச் சதி அம்பலமாகி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதோடு இவர்களுக்கு நவம்பரில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்ததால் கேதனை அவர்கள் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கை மேலும் வலுப்படுத்த, குற்றவாளிகளுக்குப் பொய் கண்டறியும் சோதனை நடத்தக் காவல்துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளனர்.