கர்நாடக மாநிலத்தின் மிக உயரிய மற்றும் பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியான பெங்களூரு விதான் சவுதா (சட்டமன்றம்) கட்டடத்தின் முன்பாக, நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று நடுரோட்டில் ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதான் சவுதா முன்பாக நின்று புகைப்படம்  எடுப்பது தொடர்பாக அந்த இளைஞர்களுக்குள் திடீரென வாய்மொழித் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இந்த வாக்குவாதம் எல்லை மீறியதைத் தொடர்ந்து, அவர்கள் பொது இடம்  என்றும் பாராமல் ஒருவரையொருவர் சரமாரியாகக் குத்தியும், சட்டையைப் பிடித்து இழுத்துத் தரதரவென தள்ளியும் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த மோதலின் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. மிகவும் பாதுகாப்பான விதான் சவுதா பகுதிக்கு வெளியே இத்தகைய அநாகரிகமான வன்முறை அரங்கேறியது குறித்துத் தகவல் அறிந்த பெங்களூரு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக மோதலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் சட்ட ஒழுங்கை மீறிய குற்றத்திற்காக, இந்த சண்டையில் ஈடுபட்ட நேபாளத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தடைசெய்யப்பட்ட அல்லது அதீத பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பகுதிகளில் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.