சமூக வலைதளங்களில் தினந்தோறும் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டுமின்றி, பல அதிரடியான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களின் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு நகைக்கடையில் நடந்த வினோதமான கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை உலுக்கியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், நகைக்கடை உரிமையாளர் ஒருவர் பகல் நேரத்தில் தனது கடையில் நாற்காலியில் அமர்ந்தபடி, கால்களை நீட்டி நிம்மதியாகக் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், கடையின் கண்ணாடிப் பெட்டிக்குள் மிக லாவகமாகக் கையை நுழைத்து, அங்கிருந்த பெரிய நகைப்பையை யாருக்கும் தெரியாமல் அள்ளிக்கொண்டு தப்பியோடுகிறார். உரிமையாளர் தூக்கத்திலிருந்து விழித்துப் பார்ப்பதற்குள் அந்த நபர் நகைகளுடன் மாயமாகிவிட்டார்.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்களின்படி, கொள்ளையடிக்கப்பட்ட அந்தப் பையில் சுமார் 5 கிலோ தங்கம் மற்றும் 12 கிலோ வெள்ளி நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய சந்தை மதிப்பின்படி இதன் விலை சுமார் 8 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தொகை குறித்த அதிகாரப்பூர்வமான காவல்துறை உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் கடைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமையாளர்களின் பொறுப்பற்றத்தனம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ள இந்த வீடியோ, “ஒரு சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தும்” என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.