லண்டன் பெர்க்பெக் கல்லூரியில் ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்’ என்ற தலைப்பில் இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் சிறப்புரையாற்றினார். உரைக்குப் பின் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பார்வையாளர் வரிசையில் இருந்த மாணவி ஒருவர், இந்தியாவில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிரான விரோதப் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறி, தலைமை நீதிபதியின் முந்தைய நீதிமன்றக் கருத்துகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். அந்த மாணவி தனது கேள்வியை முழுமையாக முடிக்கும் முன்பே, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவரைத் பாதியில் தடுத்து நிறுத்தினார்.

 

நிகழ்ச்சியின் தலைப்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்தது என்பதால், இந்த அரசியல் ரீதியான கேள்விக்கு அனுமதியளிக்க முடியாது எனக் கூறி ஒருங்கிணைப்பாளர் கேள்வியை நிராகரித்தார். இதனால் அதிருப்தியடைந்த சில மாணவர்கள் அரங்கில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய, அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த விவாதத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில், குறிப்பாக ‘காக்ரோச் ஜனதா கட்சி’ பக்கங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதற்கிடையே, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பொதுவெளியில் நாகரிகமற்ற முறையில் நடந்துகொள்வது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.