சென்னை மாநகர காவல்துறையின் அப்போதைய ஆணையரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அருண் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர், நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு நேரில் ஆஜரானார்.

அப்போது அவர், மனுதாரரான சந்தோஷ் சர்மா என்பவரால் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதால் ஏற்பட்ட பொதுமக்களின் போராட்டத்தை அடுத்தே அவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது என்றும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து நீதிபதிகள் அவரிடம் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றி வரும் பதிவுகள் குறித்துக் கேட்டபோது, தனது 28 ஆண்டுகால நேர்மையான போலீஸ் பணியில் ஒரு புகார் கூட இல்லை என்று அருண் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

மேலும், தம்மால் நடவடிக்கை எடுக்கப்பட்ட குற்றவாளிகளும் ரவுடிகளும் ஒன்று சேர்ந்து, சமூக ஊடகங்களில் தமக்கு எதிராக 100 சதவீதம் பொய்யான, விஷமத்தனமான பிரச்சாரங்களைச் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்களுக்கு இருக்கும் பேச்சு சுதந்திரம் அரசு ஊழியர்களுக்கு இல்லை என்றும், இதற்கு நீதிமன்றம்தான் தங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு தவறானது என்பதைத் தெரிவிப்பதற்காகவே உங்களை ஆஜராக உத்தரவிட்டோம் என்று கூறி, சந்தோஷ் சர்மாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.