நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் அப்துல் சமத், கடைசி ஓவரில் சக வீரரான அர்ஜுன் டெண்டுல்கருக்கு ‘ஸ்ட்ரைக்’ (மறுமுனைக்குச் சென்று பேட்டிங் செய்யும் வாய்ப்பு) தர தொடர்ந்து மறுத்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அர்ஜுன் டெண்டுல்கர் மைதானத்திலேயே தனது கோபத்தை வெளிப்படுத்திய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் அசாத்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. எனினும், ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 72 ரன்கள் குவித்து அணியைத் தாங்கிப் பிடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த ஆயுஷ் பதோனி 43 ரன்களும், ரிஷப் பந்த் 26 ரன்களும் எடுத்தனர்.
இறுதி ஓவர்களில் அப்துல் சமத் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் ஜோடி களத்தில் இருந்தது. பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் அப்துல் சமத் ஸ்ட்ரைக்கிங் முனையில் இருந்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்து ‘வைடு’ ஆகச் சென்றது.
இரண்டாவதாக சமத் அடித்த பந்து ‘ஷாட்’ ஆக மாறியது. ஒரு ரன் (Single) எடுப்பதற்கான தெளிவான வாய்ப்பு இருந்தது. மறுமுனையில் இருந்த அர்ஜுன் டெண்டுல்கர் ரன் எடுக்க ஓடினார், ஆனால் சமத் அவரைத் தடுத்து ரன் எடுக்க மறுத்துவிட்டார். இதேபோன்று மூன்றாவதாக பந்தை தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க அர்ஜுன் முயன்றபோதும், சமத் மீண்டும் பிடிவாதமாக ரன் ஓட மறுத்தார். அர்ஜுன் டெண்டுல்கர் ரன் ஓட தயாராக இருந்தும், சமத் அவரைத் தடுத்து ஸ்ட்ரைக்கை தன் வசமே வைத்துக் கொண்டார்.
Look at the helpness of Arjun Tendulkar, Arjun is requesting Abdul Samad to take singles
– Abdul Samad didn’t take 3 singles continuously #LSGvsPBKS #PBKSvsLSGpic.twitter.com/TAxxl8sRJW
— Raja (@_raja_kumar) May 23, 2026
தொடர்ந்து மூன்று முறை ரன் ஓட வாய்ப்பிருந்தும், தனக்கு பேட்டிங் வாய்ப்பு தராமல் சக வீரர் தடுத்ததால் அர்ஜுன் டெண்டுல்கர் மைதானத்திலேயே கடுமையான அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அதே ஓவரில் அப்துல் சமத் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசி 17 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்களை எட்டியது.
இருப்பினும், சமத் ரன் ஓட மறுத்த அந்த 3 பந்துகளில் ‘டாட் பால்’ஆக்குவதற்குப் பதிலாக 3 சிங்கிள் ரன்கள் எடுத்திருந்தால், லக்னோ அணியின் ஸ்கோர் எளிதாக 200 ரன்களைக் கடந்திருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சமத்தின் இந்த சுயநலமான ஆட்டம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. மேலும் இந்த போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
