சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த 76 வயதான ஷெங் ஹைலின் என்ற பெண்மணி, தனது வாழ்க்கையில் சந்தித்த பெரும் துயரங்களுக்குப் பிறகு 60 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து, நாட்டின் மிக வயதான தாயாக அறியப்பட்டார். கடந்த 2009-ஆம் ஆண்டு, இவருடைய ஒரே மகளும் அவரது கணவரும் கார்பன் மோனாக்சைடு நச்சுத் தாக்கத்தால் திடீரென உயிரிழந்தனர்.
இந்தத் தீவிரமான இழப்பினாலும் தனிமையினாலும் வாடிய ஷெங், தனது 60-வது வயதில் ஐவிஎஃப் மருத்துவ முறையின் மூலம் கடுமையான உடல்நலக் சவால்களுக்கு இடையே 2010-ல் இரு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். சமீபத்தில் இவருடைய வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படத் தொகுப்பு ஒன்று சர்வதேச விருதை வென்றதைத் தொடர்ந்து, இவரது உத்வேகமூட்டும் கதை மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் மருத்துவமனை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஷெங், தன் கணவரின் மறைவிற்குப் பிறகும், பெரும் பண மோசடியில் சிக்கிப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட பிறகும் தனது மகள்களின் எதிர்காலத்திற்காக மனந்தளராமல் உழைத்து வருகிறார். தற்போது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட சமூக ஊடகத் தாக்கராக மாறியுள்ள அவர், தனது 73-வது வயதிலிருந்து நேரலை ஒளிபரப்பு மூலம் சமையல் குறிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறார்.
இந்நிலையில் தங்களைப் போலக் குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் ஷெங், “நான் ஒரு தாயாக இருப்பதில் எப்போதும் பெருமை கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவதோடு, தனது மகள்களுக்காக 100 வயது வரை வாழ விரும்புவதாகவும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
