அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள புதிய எச்சரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் உலக அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கப் படைகளின் சாத்தியமான தரைவழி ஊடுருவலை எதிர்கொள்ள, ஈரான் அரசு தனது நாட்டுப் பொதுமக்களுக்குத் துப்பாக்கி கையாளும் பயிற்சிகளை அளிக்கத் தொடங்கியுள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின்படி, பொது இடங்களில் தற்காலிக துப்பாக்கிப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்களுக்கு ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, ஈரான் நாட்டுப் பள்ளிவாசல்களிலும் பொதுமக்களுக்கு இலகுரக ஆயுதங்களைக் கையாளும் பாதுகாப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் அரசுத் தொலைக்காட்சிகளும் பொதுமக்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளிக்கும் விழிப்புணர்வுப் பகுதிகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன. ‘ஓஃபக்’ (Ofogh) என்ற அரசுத் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியின் போது, முகமூடி அணிந்த இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) வீரர் ஒருவர் செய்தி வாசிப்பாளர் ஹொசைன் ஹொசைனி என்பவருக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளித்தார். அப்போது அந்த செய்தி வாசிப்பாளர், ஸ்டுடியோவின் கூரையை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

அதேபோல், மற்றொரு பெண் செய்தி வாசிப்பாளரான மோபினா நசிரி, கையில் அஸ்ஸால்ட் ரகத் துப்பாக்கியை ஏந்தியபடி, “எனது நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று நேரலையில் முழக்கமிட்டுள்ளார்.

ஈரான் உடனான தற்காலிக போர்நிறுத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “ஈரானுக்குக் கடிகாரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் உடனே அமைதி உடன்படிக்கைக்கு வர வேண்டும். இல்லையெனில் அவர்களைப் பற்றிப் பேச எதுவுமே மிஞ்சாது. காலம் பொன் போன்றது” என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சகமும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கான தீவிரத் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.