ஐபிஎல் 2026 தொடரின் 57-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கடந்த இரண்டு போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றிய விராட் கோலி, இந்தப் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடினார். 23 ரன்களில் தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய அவர், 60 பந்துகளில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது ஐபிஎல் தொடரில் அவரது 9-வது சதமாகும். இதன் மூலம் ஆர்சிபி அணி 194 ரன்கள் எடுத்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் கேகேஆர் அணி தோல்வியடைந்தாலும், அந்த அணியின் மூத்த வீரர் மனிஷ் பாண்டே செய்த ஒரு செயல் ஒட்டுமொத்த மைதானத்தையும் திகைக்க வைத்தது. போட்டியின் 18-வது ஓவரில், டிம் டேவிட் அடித்த பந்து மின்னல் வேகத்தில் பவுண்டரியை நோக்கிச் சென்றது. ஆனால், பாயிண்ட் திசையில் நின்ற மனிஷ் பாண்டே, காற்றில் இடதுபுறமாகப் பாய்ந்து ஒற்றைக் கையில் அந்தப் பந்தைப் பிடித்தார்.

இதைப் பார்த்த எதிரணி வீரர் விராட் கோலி முதல் டக்அவுட்டில் இருந்த வீரர்கள் வரை அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சமூக வலைதளங்களில் இது “சீசனின் சிறந்த கேட்ச்” எனப் பாராட்டப்பட்டு வருகிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த அனைத்து சீசன்களிலும் குறைந்தது ஒரு போட்டியிலாவது விளையாடிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை மனிஷ் பாண்டே இந்தப் போட்டியின் மூலம் பெற்றார்.

முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியில் இளம் வீரர் ரகுவன்ஷி (71) மற்றும் ரிங்கு சிங் (49*) அதிரடியாக விளையாடி 192 ரன்கள் சேர்த்தனர். இருப்பினும், கோலியின் சதத்தால் அந்த அணியின் வெற்றி பறிபோனது. தற்போது 11 போட்டிகளில் விளையாடியுள்ள கேகேஆர் 9 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.