மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்ற மர்மத்திற்கு விடை தரும் வகையில், நாசாவின் முன்னாள் விஞ்ஞானி இங்க்ரிட் ஹொன்காலா பகிர்ந்துள்ள அனுபவங்கள் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

தனது வாழ்நாளில் மூன்று முறை மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டதாகக் கூறும் இங்க்ரிட், முதல்முறை இரண்டு வயதில் தண்ணீரில் மூழ்கியபோது தனது உடல் அப்படியே மிதப்பதையும், ஆன்மா வெளியேறுவதையும் உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார்.

அப்போது ஏற்பட்ட ஆழ்ந்த அமைதியும், ஒளியுலக அனுபவமும் மரணம் குறித்த அவரது பயத்தைப் போக்கியுள்ளது. 25 மற்றும் 52 வயதிலும் இதே போன்ற மரண அனுபவங்களைப் பெற்ற அவர், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, அது உணர்வுநிலை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறும் ஒரு அழகான கதவு என்று உறுதியாகக் கூறுகிறார்.

கடல்சார் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தனது அனுபவங்களை வெறும் மாயத்தோற்றம் என்று ஒதுக்கிவிடாமல் அறிவியல் மற்றும் ஆன்மீகத்தோடு ஒப்பிடுகிறார்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதாகவும், நாம் அனைவரும் வெறும் உடல் அல்ல, ஒளிக்கதிர்கள் என்றும் அவர் விளக்குகிறார்.

‘ஒளியைக் காண இறத்தல்’ என்ற தனது புத்தகத்தில், நமது உணர்வுநிலை பிரபஞ்சத்தின் அடிப்படைப் பகுதி என்பதை வலியுறுத்துகிறார். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றே என்று நம்பும் இங்க்ரிட்டின் இந்தக் கதைகள், மரணம் குறித்த மனிதர்களின் பார்வையை மாற்றியமைக்கும் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளன.