மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில், 22 வயது இளம்பெண்ணும் அவரது 3 மாதக் குழந்தையும் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவபுரியைச் சேர்ந்த மகக் குஹாரியா என்பவரும், புஷ்பேந்திர சவுகான் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்தூரில் ‘லிவிங்-இன்’ உறவில் இருந்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. சமீபகாலமாக புஷ்பேந்திரா தன்னைத் துன்புறுத்தியதால், மகக் குஹாரியா தனது குழந்தையுடன் சிவபுரியில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த புஷ்பேந்திரா, பலமுறை மகக் குஹாரியாவை மிரட்டியதுடன், தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, புஷ்பேந்திரா தனது கூட்டாளிகள் 10 பேருடன் ஆயுதங்களுடன் மகக் குஹாரியாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அங்கிருந்த குடும்பத்தினரை ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதுடன், தடுத்த மகக்கின் பெற்றோரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர், மகக் குஹாரியாவையும் அவரது 3 மாதக் குழந்தையையும் வலுக்கட்டாயமாக ஒரு காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

“>

 

இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, சிவபுரி கோட்வாலி காவல்துறையினர் புஷ்பேந்திரா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடத்தல், கொலை மிரட்டல் மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.